Skip to content

நல்ல மாட்டை தேர்ந்தெடுப்பது எப்படி?

நல்ல மாடு, எருமைகளைத்தேர்வு செய்யும் முறை: நல்ல மாட்டிற்கான அடையாளங்கள் – பசு பார்க்க சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். உடல் முன்பகுதி சிறுத்து இருக்க வேண்டும். பின்பகுதி பெருத்து இருக்க வேண்டும். கெட்டசதை போட்டிருக்க கூடாது. உடலில் உள்ள எலும்புகள் தெரியும்படி இருக்க வேண்டும்.

பால்மடி பஞ்சுபோல் இருக்க வேண்டும். தொட்டால் பால் வழிய வேண்டும். பால்மடி, பால் சுரக்கும் பால் கொடி கண், தொப்புள் வரை நீண்டு இருக்க வேண்டும். பாய்ச்சல் இல்லாமல் இருக்க வேண்டும். இரண்டாம் ஈற்று மாடாக இருக்க வேண்டும். இரண்டாம் ஈற்றிலிருந்து 4-ம் ஈற்று வரை பால் படிப்படியாக அதிகமாகி வரும் 5-ம் ஈற்று முதல் பால் அளவு குறைய தொடங்கி விடும். வால் நீண்டு இருக்க வேண்டும். கலப்பின மாடாக இருக்க வேண்டும். மிகச்சிறிய மடியாக இருந்தால் பாலின் அளவு குறைவாகவே இருக்கும். மடி தொங்கிக் கொண்டும் துருத்திக் கொண்டும் இருக்கக் கூடாது. நான்கு காம்புகளும் சீராக இருக்க வேண்டும். தெற்கும், மேற்கும் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. பால் நாளங்கள் நிறைந்து இருக்க வேண்டும். மேல் உதடு இலேசாக ஈரப்பசையுடன் இருக்க வேண்டும்.

நன்றாக அசை போட்டுக் கொண்டு இருக்க வேண்டும். பால் காம்புகளின் இடைவெளி ஒரே சீராக இருக்க வேண்டும். மாட்டின் தோல் மென்மையானதாக இருக்க வேண்டும். மூக்குத் தண்டு நேராக இருக்க வேண்டும். கண்கள் பிரகாசமாக துருதுருவென்று இருக்க வேண்டும்.

எருமைகளில் அதிக பால் தருபவை : 1.முர்ரா 2.நாக்பூரி 3. மெக்சேனா 4.தில்லி இவை உயர் சாதி இனங்கள். முர்ரா எருமைகளைத் தமிழ்நாட்டில் பலர் வளர்த்து வருகிறார்கள். நம்நாட்டு எருமைகள் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ஏழு லிட்டர் பால் தரும். எருமைப் பாலில் கொழுப்புச்சத்து அதிகம். எருமைப்பாலுக்கு நல்ல விலை உண்டு. சந்தையில் மாடு வாங்குவதை தவிர்த்து நம்பிக்கையான பண்ணைகளில் வாங்கலாம். பக்கத்து தோட்டத்தில், பக்கத்து ஊரில் விசாரித்துப் பார்த்து வாங்க வேண்டும். மூன்று முறை பால் கறந்து பார்த்தால் தான் உண்மை நிலவரம் புரியும்.

சந்தையில் வாங்கும் மாட்டில் உள்ள குறைபாடுகள் : கடைவாய்ப் பல் இல்லாமல் இருக்கும். தோட்டத்தில் வந்தவுடன் தின்ற வைக்கோலை அசை போட்டிடாமல் கட்டி கட்டியாக கக்கி வைக்கும். மடியைக் கட்டி கொண்டு வந்து தரகர்கள் பால் கறந்து காட்டு வார்கள். ஆறு, ஏழு மாதமான கறவையை வேறு மாட்டின் இனங்களென்று கொண்டு வந்து இளங்கன்று மாடு என்று நம்ப வைப்பார்கள். தோட்டத்திற்கு வந்தவுடன் அந்தக்கன்றுக்கு மாடு பால் தராது. சுழி சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கெட்ட சுழியைச் சூடு போட்டு அழித்து விடுவார்கள். போன ஈற்றில் மதநோய் வந்த மாடாக இருக்கும். முறிந்து போன கொம்பை ஒட்டிச்சாயம் பூசிக்கொண்டு வருவார்கள். இப்படிப் பட்ட தில்லுமுல்லுகள் ஏராளமாக நடக்கும். அதனால் சந்தையில் மாடு வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

நாட்டுக்கோழி : வளர்க்க ஆசைப்படுபவர்கள் கிராமத்திலேயே சில குஞ்சுகளையும், சேவலையும் வாங்கி வளர்க்கலாம். இதற்கு பெரிய முதலீடு ஒன்றும் தேவையில்லை. திறந்தவெளியில் சென்று மேய்ந்து வரும். தோட்டத்தில் வளர்ப்பதற்கு இது மிகவும் ஏற்றது. நாய், நரி, பூனைகள், கோழிக்கு பகைவர்கள்.

நாட்டுக்கோழி தோட்டத்தில் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் : பயிரைத்தாக்கும் புழுப்பூண்டுகளைத் தின்னும் கரையான் எங்கிருந்தாலும் விடாது. புழு பூச்சிகளைப் பிடித்து தின்று விடுவதால் மருந்து தெளிக்கும் செலவு மிச்சமாகும். மாலையில் கொட்டிலில் அடைப்பதற்கு முன்பு கம்பு, ராகி, மக்காச்சோள குருணை, உடைத்த நாட்டுச்சோளம் ஆகியவற்றை இறைத்து வைக்கலாம். ராணிக்கட் நோயைத் தாக்கும் தடுப்பூசியை குஞ்சுகளுக்கு ஒரு மாதம் ஆனவுடன் போட வேண்டும். மாதம் ஒருமுறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும்.

– டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

 மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj