Skip to content

ஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை

நான்கடி அகலம், ஆறடி நீளம், மூன்றடி ஆழத்தில் அருகருகே 10 குழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இக்குழி ஒரு டன் கழிவுகளைக் கொள்ளும் அளவில் இருக்கும். 750 கிலோ தாவரக்கழிவுகள், 250 கிலோ கால்நடைக் கழிவுகள் ஆகியவற்றை எடுத்து நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். 36 லிட்டர் தண்ணீரில் 38 மில்லி இ.எம் ஊற்றி நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இ.எம் கிடைக்காத நிலையில் ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 36 லிட்டர் தண்ணீரில் கலந்துகொள்ளலாம்.

கழிவுகள் கலந்த கலவையை முதல் குழிக்குள் அரையடி ஆழத்துக்கு நிரப்ப வேண்டும். நுண்ணுயிர்கள் கலந்த தண்ணீரை 6 லிட்டர் அளவுக்கு, கழிவுகள் மீது தெளிக்க வேண்டும். மீண்டும் அரையடி உயரத்துக்குக் கழிவுகள், அதன் மீது 6 லிட்டர் நுண்ணுயிர்கள் கலந்த நீர் என அடுக்கடுக்காக அமைக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது, மூன்றடி ஆழமுள்ள குழியில் ஆறு அடுக்குகள் வரை போடலாம். இப்படிக் குழியை நிரப்பி, ’வினைல் ஷீட்’ கொண்டு மூடி, ஷீட் நகராத அளவுக்கு அதன் மீது மண்ணைப் போட்டு விட வேண்டும். அதாவது, குழிக்குள் காற்று புகாதவாறு மூடிவிட வேண்டும். இதே முறையில், மொத்தம் ஒன்பது குழிகளை நிரப்ப வேண்டும். பத்தாவது குழி காலியாக இருக்க வேண்டும்.

15 நாள் கழித்து, ஒன்பதாவது குழியில் இருக்கும் கழிவுகளை வெட்டி எடுத்து பத்தாவது குழியில் நிரப்பி, காற்றுப்போகாமல் மூடி வைக்க வேண்டும். அடுத்து எட்டாவது குழியில் இருக்கும் கழிவை ஒன்பதாவது குழியில் கொட்டி மூட வேண்டும். இப்படி அனைத்துக் குழிகளிலும் உள்ள கழிவுகளையும் குழி மாற்றும்போது அவை புரட்டப்பட்டுவிடும். அடுத்த 15 நாள்களில் இந்தக் குழிகளில் இருக்கும் கழிவுகள் நன்றாக மட்கி உரமாக மாறிவிடும்.

நாம் மொத்தம் 9 ஆயிரம் கிலோ (9 டன்) கழிவுகளைக் கொட்டியிருந்தாலும், உரமாக எடுக்கும் போது, 8,100 கிலோ ( 8.1 டன்) அளவில் கிடைக்கும்.

நன்றி

பசுமை விகடன்

1 thought on “ஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj