Skip to content

மல்லிகையில் ஊடுபயிராக தர்பூசணி சாகுபடி !

ஒரு ஏக்கர் நிலத்தில் தர்பூசணி சாகுபடி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

மல்லிகையில் ஊடுபயிராக தர்பூசணி நடவு செய்ய விரும்புவர்கள்.. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை நன்கு உழுது 7 அடி இடைவெளியில், 3 அடி சதுரம் 3 அடி ஆழம் என்ற அளவில் குழி எடுக்க வேண்டும். இந்த இடைவெளியில் ஒரு ஏக்கர் நிலத்தில் கிட்டத்தட்ட 800 குழிகள் வரை எடுக்கலாம். ஒவ்வொரு குழியிலும் 5 கிலோ ஆட்டு எருவுடன் நிலத்தின் மேல் மண்ணைக் கலந்து நிரப்பி சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மண்ணை ஈரப்படுத்தி, ஒரு குழிக்கு ஒரு நாற்று என மல்லிகை நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு மல்லிகைச் செடியை சுற்றிலும் அரையடி அளவு இடைவெளி விட்டு 3 அல்லது 4 தர்பூசணி விதைகளை ஊன்ற வேண்டும். விதைகளை பஞ்சகவ்யாவில் அரைமணிநேரம் ஊற வைத்து விதைநேர்த்தி செய்தால் நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும்.

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் அரைமணி நேரம் பாசனம் செய்ய வேண்டும். பிறகு ஒரு நாள் விட்டு ஒருநாள் பாசனம் செய்தால் போதுமானது. விதைத்த 8-ம் நாளுக்கு மேல் விதைகள் முளைக்கும். 15-ம் நாள் களைகளை அகற்ற வேண்டும். 17,19 மற்றும் 21-ம் நாட்களில் பாசனம் செய்த பிறகு, ஒவ்வொரு குழியிலும் கால் லிட்டர் அமுதக்கரைசலை ஊற்ற வேண்டும்.

25-ம் நாளுக்கு மேல் தர்பூசணிக் கொடி படரத் தொடங்கும். அதற்குப் பிறகு, காய்ச்சலும் பாய்ச்சலுமாக 4 நாட்கள் இடைவெளியில் பாசனம் செய்தால் போதுமானது. 25, 29, 33 மற்றும் 37-ம் நாட்களில் பாசனம் செய்த பிறகு, ஒவ்வொரு குழியிலும் அரை லிட்டர் அமுதக்கரைசலை ஊற்ற வேண்டும். 30-ம் நாள் ஒரு லிட்டர் பஞ்சகவ்யாவை 70 லிட்டர் தண்ணீரில் கலந்து தர்பூசணி இலைகள் மீது தெளிக்க வேண்டும். 32-ம் நாள் இரண்டரை லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டியை 70 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 38-ம் நாள் 2 லிட்டர் பஞ்சகவ்யாவை 140 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 39-ம் நாள் 5 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டியை 140 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 45-ம் நாள் 2 லிட்டர் வடிகட்டிய ‘வராஹ குணப’த்தை 260 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். அதற்குப்பிறகு இடுபொருட்கள் கொடுக்கத் தேவையில்லை. 45-ம் நாளுக்கு மேல் பூக்கள் பூத்து பிஞ்சுகள் உருவாகும். 65 முதல் 70 நாட்களில் காய்கள் முற்றி அறுவடைக்குத் தயாராகி விடும்.

தனிப்பயிராக தர்பூசணி சாகுபடி செய்பவர்கள்..

நிலத்தை நன்றாக உழுது, வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளி, செடிக்குச் செடி 2 அடி இடைவெளி இருக்குமாறு ஒரு கன அடி அளவில் குழிகள் எடுத்து சொட்டு நீர்ப்பாசனக் குழாய்களை அமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழியிலும் 2 கிலோ ஆட்டு எருவை மேல் மண்ணுடன் கலந்து நிரப்பி குழிக்கு 4 விதைகள் விதம் விதைத்து பாசனம் செய்ய வேண்டும். சொட்டுநீர்ப் பாசன வசதி இல்லாத விவசாயிகள், 8 அடி இடைவெளியில் வாய்க்கால் எடுத்து, வாய்க்காலின் உள்கரையில் 2 அடி இடைவெளியில், (ஜிக்ஜாக்) குறுக்கு நெடுக்கு முறையில் விதைகளை நடவு செய்யலாம். ஊடுபயிராக சாகுபடி செய்யும்போது 10 டன் வரை மகசூல் கிடைக்கும். தனிப்பயிராக சாகுபடி செய்யும் போது 15 டன் வரை மகசூல் எடுக்கலாம்.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj