Skip to content

ஈஷா அழைக்கிறது இயற்கை வேளாண்மைக்கு…

இயற்கை வேளாண் வித்தகர் திரு. சுபாஷ் பாலேக்கர் அவர்களுடன் இணைந்து ஈஷா பசுமைக்கரங்கள் திட்டமானது இயற்கை விவசாயத்தை முன்னிறுத்தும் தனது முதற்கட்ட முயற்சியைத் துவங்கியுள்ளது! ஜீரோ பட்ஜெட்டில் இயற்கை விவசாயம் செய்யும் முறையை நீங்களும் கற்றுக்கொண்டு, பிறருக்கும் கற்றுக்கொடுக்கும் வகையில் அமையக்கூடிய 8 நாள் நிகழ்ச்சி குறித்து இங்கே சில தகவல்கள்!

இது இயற்கை வேளாண்மைக்கு திரும்பும் நேரம்!

“இப்போது யோகா…” என்பதை முதல் வார்த்தையாக கூறி, யோக சூத்திரங்களை நமக்கு வழங்கியருளினார் பதஞ்சலி மகரிஷி. “நீங்கள் இதற்கு முன் அறியாமையில் வேறு எதை எதையோ செய்தீர்கள்! ஆனால், இப்போது யோகாவைத் துவங்கலாம்!” எனும் அர்த்தத்தில் அவர் அப்படி எழுதினார்.
இந்த ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண் முறையை பாரதம் முழுக்க சுமார் 40 லட்சம் விவசாயிகள் இவரிடமிருந்து கற்றுக்கொண்டு, பயன்பெற்று வருகின்றனர் எனபது குறிப்பிடத்தக்கது. அதுபோலவே இதற்கு முன் அறியாமையில், எப்படியாவது அதிக மகசூல் ஈட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், இந்த பூமியில் இரசாயன இடுபொருட்களையும் வீரிய ஒட்டுரக விதைகளையும் பயன்படுத்தி மண்ணையும் தண்ணீரையும் காற்றையும் பாழாக்கி உள்ளோம். ஆம்! இதற்கு முன் நம் பூமித் தாயின் மடியில் இரசாயன நஞ்சை தூவித் தூவி, அவளை மலடாக்க முற்பட்டோம்! இப்போது இயற்கை விவசாயத்திற்கு நாம் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா போன்ற இயற்கை ஆர்வலர்கள் பலர் அறைகூவல் விடுத்தவண்ணம் உள்ளனர்.
“என்னது இயற்கை விவசாயமா… முதல்ல விவசாயிங்க இன்னும் இருக்காங்களான்னு கொஞ்சம் செக் பண்ணுங்க சார்!” என்று சிலர் வேடிக்கை பேசுகிறார்கள். விவசாயிகள் இல்லையென்றால் 120 கோடி மக்களுக்கும் ஏது உணவு?! என்னதான் ஆண்ட்ராய்டு ஃபோனிலும் ஐஃபோனிலும் தொடுதிரையை தொட்ட மாத்திரத்தில் உலகமே உங்களுக்கு வசப்பட்டாலும், எங்கோ ஒரு மூலையில் இருக்கும் விவசாயி இந்த மண்ணைத் தொடவில்லையென்றால் நீங்கள் உண்ணமுடியாது!

விவசாயம் நடக்கத்தான் செய்கிறது… ஆனால் அது எப்படி நடக்கிறது? எந்த விதத்தில் நடக்கிறது? என்பதுதான் இப்போது நாம் கவனிக்க வேண்டியவை!

சுதந்திரம் அடைந்த பின், மக்கள் தொகை பெருகி வருவதை காரணம் காட்டி, இத்தனை கோடி மக்களுக்கு நாம் உணவு உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் இயற்கை முறையில் விவசாயம் என்பது வேலைக்கு ஆகாது என்று சொல்லி நவீன இரசாயன வேளாண் முறை என்ற பெயரில் செயற்கை உரங்களும் சத்து குறைவான மணிகளைத் தரக்கூடிய விதைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. நவீன இயந்திரங்களின் பயன்பாட்டால் நம் நாட்டு கால்நடைகளும் காணமல் போயின. ஆகமொத்தத்தில் விவசாயத்தில் நாம் நமது சுயசார்பை இழந்து உரம், விதை, இயந்திரம் என எல்லாவற்றிற்கும் பிறரை அண்டியிருக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். ஆனால் இதனால் நாம் பல்வேறு பின்விளைவுகளை தற்போது சந்தித்து வருகிறோம்.

மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்கள் நமது மண்ணில் உயிர்ச்சத்துக்கள் குறைந்து வருவதையும், வீரிய ஒட்டுரக விதைகளால் விளையும் உணவுகளால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மக்களிடத்தில் எடுத்துரைத்து, இயற்கை வேளாண்மையை முன்னிறுத்துவதற்கான அரும் முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். சத்குரு அவர்களும் நம்மாழ்வார் அவர்களும் இணைந்து மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது இயற்கை முறையில் அதிக மகசூலை விளைவிக்கக்கூடிய வழிகளை “ஜீரோ பட்ஜெட் விவசாயம்” என்ற பெயரில் நமக்கு இப்போது கற்றுக்கொடுக்க இயற்கை வேளாண் வித்தகர் திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்கள் ஈஷா பசுமைக்கரங்களின் அழைப்பின்பேரில் வருகிறார்.

மஹாராஷ்ட்ரா மாநிலம் அமராவதி பகுதியைச் சேர்ந்த இயற்கை வேளாண் வித்தகர் திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்கள் இயற்கை வேளாண்மையை முன்னெடுத்து, இரசாயன இடுபொருட்களினால் விளையக் கூடிய பாதிப்பிலிருந்து மண்ணையும் மக்களையும் மீட்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இவரது இந்த ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண் முறையை பாரதம் முழுக்க சுமார் 40 லட்சம் விவசாயிகள் இவரிடமிருந்து கற்றுக்கொண்டு, பயன்பெற்று வருகின்றனர் எனபது குறிப்பிடத்தக்கது.

“நஞ்சில்லாத உணவை உட்கொள்ளவே மக்கள் அனைவரும் விரும்புகிறார்கள். ஏனென்றால் புற்றுநோய், நீரிழிவு, காச நோய், இதய நோய் ஆகிய இதுபோன்ற நோய்களால் யாரும் இறக்க விரும்புவதில்லை. இந்த நோய்களையெல்லாம் உண்டாக்கும் நஞ்சுகலந்த உணவானது நவீன இரசாயன வேளாண்முறை நமக்கு தந்த பரிசாகும். விவசாயிகளை தற்கொலையிலிருந்து காக்கவும் நஞ்சில்லா உணவை மக்களுக்கு வழங்கவும் இந்த ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை வழிமுறைகளை வழங்குகிறேன்” என்று குறிப்பிடுகிறார் சுபாஷ் பாலேக்கர் அவர்கள்.

ஜீரோ பட்ஜெட்டில் இயற்கை விவசாயம்

செலவில்லாமல் குறைந்த நீர் பாசனத்தில், குறைந்த மின்சாரத்தில், பணியாட்கள் செலவை குறைக்கும் தொழிற்நுட்பத்துடன், நாட்டுக் கால்நடைகளைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்யும் முறையைக் கற்றுக்கொடுக்க ஈஷா பசுமைக்கரங்களின் அழைப்பின்பேரில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்கள் வருகிறார்.

செலவே இல்லாத ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்றால், பயிர் உற்பத்தி செய்வதற்கென எந்தவித பொருட்களையும் வெளியிலிருந்து வாங்காமல், உற்பத்தி செய்வதற்கு தேவையான அனைத்தையும் விவசாய நிலத்திலிருந்தே பெற்றுக்கொள்ளும் முறையாகும். இந்த முறையைப் பின்பற்றுகையில் உரத்திற்காகவோ விதைக்காகவோ நாம் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இயந்திர பயன்பாடு இல்லாமல், அதற்கு மாற்றாக நாட்டுக் கால்நடைகளை பயன்படுத்தக்கூடிய சாத்தியங்கள் இருப்பதை இம்முறை முன்னிறுத்துகிறது.

ஜீரோ பட்ஜெட்டில் இயற்கை விவசாயம் செய்வது எப்படி? இயற்கை விவசாயத்தை முழுமையாகக் கடைப்பிடிக்க முடியுமா? இதுபோன்ற கேள்விகள் உங்கள் மனதில் தோன்றலாம்! உங்கள் சந்தேகங்களை எல்லாம் போக்கும் வகையிலும், இதன் நடைமுறை சாத்தியத்தை உறுதிப்படுத்தும் விதமாகவும், நீங்கள் கற்றுக்கொண்டதை மற்றவருக்கும் கற்றுக்கொடுக்கும் வகையிலும் இந்த வகுப்பின் தன்மையானது அமையும். நிகழ்ச்சியின் 8 நாட்களும் முழுமையாகக் கலந்துகொள்பவர்களுக்கு தொடர்ந்து ஆலோசனைகளும் ஆதரவும் வழங்கப்படும். இதன்மூலம் இயற்கை விவசாயம் குறித்த தெளிவான பார்வையை நீங்கள் பெறுவது உறுதி!

நிகழ்ச்சி குறித்த விவரங்கள்

பல்லடம் திருச்சி மெயின் ரோடு, ஸ்ரீ விக்னேஷ்மஹால் (இலட்சுமி மில்ஸ் பஸ் நிறுத்தம்)ல் 10.12.2015 முதல் 17.12.2015 வரை, 8 நாட்கள் தொடர்ந்து வகுப்புகள் நடைபெறும். நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் இடம் வழங்கப்படும். முன்பதிவு அவசியம்! எட்டு நாட்களும் பயிற்சியில் கலந்துகொள்வது அவசியம்!

ஜீரோ பட்ஜெட் சேனாதிபதி(பயிற்றுநர்) சிறப்பு பயிற்சி வகுப்பு எனப்படும் இந்த பயிற்சிக்கான விண்ணப்பத்தை http://www.projectgreenhands.org/ZBT/ என்ற வலைதளம் மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் அனைத்து ஈஷா நர்சரிகளிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும். மேலும் விபரங்களுக்கு: 94425 90068, 94425 90036.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை info@projectgreenhands.org என்ற இமெயில் முகவரிக்கோ அல்லது பசுமைக் கரங்கள் திட்டம், ஈஷா யோகா மையம், வெள்ளியங்கிரி மலைச்சாரல், செம்மேடு அஞ்சல், கோவை – 641114, செல்: 94425 90062 என்ற முகவரிக்கோ அனுப்பவும்.

ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம்

தமிழகத்தின் பசுமைப் பரப்ப்பை அதிகரிக்கும் நோக்கில், சத்குருவின் வழிகாட்டுதலின்படி ஈஷா பசுமைக்கரங்கள் திட்டத்தின் மூலம் தமிழகமெங்கும் பல கோடி மரங்களை ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் நட்டு வளர்த்து வருகின்றனர். தற்போது ஈஷா பசுமைக் கரங்கள் திட்டமானது தமிழக விவசாயிகளை இயற்கை வேளாண்மைக்கு திரும்பச்செய்யும் முயற்சிகளைத் துவங்கியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

1 thought on “ஈஷா அழைக்கிறது இயற்கை வேளாண்மைக்கு…”

  1. Pingback: ஈஷா அழைக்கிறது இயற்கை வேளாண்மைக்கு… | பசுமை தமிழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj